kongu pavalankatti vellala gounder

Wednesday, April 15, 2020

கார்காத்த வேளாளர் பிள்ளை பெயர் காரணம் பகுதி 2

கார்காத்தார் வரலாறு

கார்காத்தார் சமூக வரலாறும், வளர்ச்சியும்


தொகுப்பு : S.P.S. இராமகிருஷ்ணப்பிள்ளை, விருதுநகர்.
ஆதாரங்களுடன் கூடிய புதிய தொகுப்பு : க. குருசாமி பிள்ளை, வ.உ.சி.நகர், விருதுநகர்.



கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவனின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபறை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
-       அருள்திரு இராமலிங்க சுவாமிகள்


கார்கார்த்தார்

கார்கார்த்தார் என்பவர் காசினியில் முன்னாளில்
ஏர்காத்தார் என்பவர் இனியேனும் – நீர்காத்தா
சீர்காத்துச் செல்வமு ஞ்சேர்த்தே சிறந்த ஓர்
பேர்காக்க வேண்டும் பிரான்

நமது சமூகமும் சமூகச் சூழலும்

நமது சமூகம் வேளாளர் என்ற சமூகத்தின் கார்காத்தார் என்ற பிரிவை உடையது.  முன்னொரு காலத்தில் ஏர்காத்து, ஊராண்ட இக்கார்காத்தார் சமூகம் தற்சமயம் நலிவுற்று, மெலிவுற்று மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.  முற்பட்டோர் என்ற வகுப்பில் உள்ள நாம் பெரும்பாலானவர்கள், கல்வி, செல்வ நிலை மற்றும் உத்தியோக நிலை ஆகியவைகளில் பிற்பட்டோர் என்ற நிலையிலேயே உள்ளோம்.  இதற்கெல்லாம் மூலகாரணம் ஒற்றுமை, கட்டுப்பாடு, சமூகத்தொண்டு முதலியவைகள் நம்மில் குறைந்து கொண்டே வருவது தான்.  ஆகவே, நமது சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு, இந்த தலைமுறையினர் ஒற்றுமையுடனும், சமூகப் பாசத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சேவை செய்ய முன்வர வேண்டும்.  அவர்களுக்கு முதியோர் வழி கொடுத்து நெறிப்படுத்த வேண்டும்.  இதுவே நமது சமூகத்தின் இன்றைய சூழல்.

சமூக வரலாறு

இந்த சமூகத்தினருக்கு கார்காத்தார் எனப்பெயர் வரக்காரணம் யாது?  இவர்களின் முன்னோர்கள் எங்கு தோன்றி எங்கு சென்று எப்படிப் புகழ் அடைந்தனர்? என்றெல்லாம் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  நம்மை நாமே தெரிந்து கொள்ளாமல் நமது சமூக சடங்குகளையும், நடைமுறைகளையும் பின்பற்றுவது சிரமமே.  எனவே மேற்கூறியவைகளுக்கு விடை காண திருவாளர். நெல்லைசுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எழுதிய கார்காத்தார் வரலாறு என்ற சுவடியிலிருந்து சில விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறோம்.

கார்காத்தார், காராளர், காரைக்காட்டார் என்ற சொல் வேளாளரின் ஒரு பகுதியினரைக் குறிக்கும் சிறப்புச் சொற்கள்.

வேளாளர், வேளாண்மையர், வேள்வியாளர், வெள்ளாளர் இவைகளெல்லாம் பல காரணங்களால் திரிந்து வழங்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கும் சொற்கள்.  வேளாளர் என்போர் வருணாசிரம் தருமத்தில் வைசியர் என்னும் பிரிவில் உள்ளவர்கள்.  ஆதாரம் – வேளாளர் என்பவரின் தொழிலான வேளாண்மையைக் குறிக்கும் வடமொழிச் சொல் வைசிகம் ஆகும்.  எனவே வேளாளர் என்பவர் வைசியர் ஆவர்.  மேலும் ­­ ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய சூடாமணி நிகண்டில் செளமிய (1850) ஆண்டுப் பதிப்பில் 3 பாட்டுகள் நாம் வைசியர் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய சூடாமணி நிகண்டு  - http://noolaham.net/project/42/4165/4165.pdf


இவ்வேளாளரின் ஆதித் தோற்றம் பார்வதிதேவி-உமாதேவி ஆகும்.  வேளாளர் கங்காபுத்திர் என அழைக்கப் பெறுவதால், வேளாளரின் பிறப்பிடம் கங்கை.  அக்கங்கைக்கு ஆதாரம் உமாதேவி ஆகும் என புராண வரலாறு கூறுகிறது.  எனவே வேளாளரின் தோற்றம் உமாதேவி தான் என அறியப்படுகிறது.  உமை அளித்த எட்டு உழக்கு நெல்லைப் பெற்று வேளாண்மைத் தொழில் செய்து உலகத்தில் 32 அறங்களும் முட்டின்றி நடைபெற காரணகர்த்தர்களாக இருந்து நமது சமூகம் பொதுப்பணி ஆற்றி வந்திருக்கிறது. வெள்ளத்தைத் தடுத்து ஆண்டதால் வெள்ளாளர் என்றும் விளைவாளர் என்பது மருவி வேளாளர் என்றும், அரசரால் விரும்பிய தன்மையும், ஆண்மையுடைய தொழிலாக மந்திரித் தலைமையும், சேனைத் தலைமையும் செய்து வந்தமையால் வேளாண்மையர் என்றும், கரை அமைத்து விவசாயம் செய்து காணி ஆண்டமையால் கரையாளர், காணியாளர் என்றும் அழைக்கப்பெற்றனர்.


கங்கை தீரத்தில் தோன்றிய வேளாளர் தென்னாட்டிற்கு வந்தது எப்படி?

ஆரியர்கள் வட இந்தியாவில் வந்து குடியேறிய பிறகு இவர்கள் குலசேகர பாண்டியனால் நமது தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பெற்றதாகவும், இவர்கள் பாண்டி நாட்டில் உள்ள கள வேள்வி நாட்டுப் பகுதியில் குடியேறியதாகவுக் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  தற்சமயம் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள வீரசோழம் என்னும் ஊர் களவேள்வி நாட்டின் பகுதியில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

கார்கார்த்தார் எனப்பெயர் வரக்காரணம்?

களவேள்வி நாட்டில் வேளாளர் குடியேறி இருந்து வரும் காலத்தில் ஒரு நாள் உக்கிரபாண்டியன் என்னும் அரசன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்ற போது புட்கலா வர்த்தம் (பொன்), சங்காரித்தம் (பூ), துரோணம் (மண்), காளமுகி (கல்) என்னும் நான்கு மேகங்கள் பாண்டியன் பகுதியில் ழை பொழியாமல் மேயக் கண்டு, கோபமுற்று அவற்றை சிறையிலடைத்து விட்டான்.  இதனை அறிந்த இந்திரன் சேனைகளுடன், பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று பாண்டியனுக்கு முடங்கல் வரைந்தான்.  அதாவது, பாண்டிய நாட்டில் மாதமொரு மழை பொழிய ஏற்பாடு செய்கிறேன்.  மேகங்களை விடுவித்து விடவும் என எழுதினான்.  அதைக் கண்ட பாண்டியன், இந்திரனின் கூற்றுக்கு யார் பிணை எனக்கேட்டான்.  அப்போது வேளாளன் ஒருவன் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக திருவிளையாடற் செய்யுள் 5758 ஆகியவைகளில் அறியக் கிடைக்கிறது. 

மேற்கூறியவாறு காருக்கு (மேகத்திற்கு) பிணை கொடுத்ததால் அந்த வேளாளனுக்கு கார்காத்தான் என்ற காரணப்பெயர் வந்தது.  அவனின் சந்ததியே நாம்.  எனவே கார்காத்தார், காராளர் என இரண்டும் காரணப் பெயர்கள்.  இதற்கு ஆதாரமாக கடம்புவன் புராணம், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளில் பாக்கள் உள்ளன.  மேகங்களைக் கட்டி வைத்த இடம் கட்டனூர் என்றும், சிறையிடப் பெற்ற இடம் இருஞ்சிறை எனவும் வழங்கப் பெற்றது.  இவ்வூர்கள் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ளதே நமக்குச் சான்று.

இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும். 

     (இ - ள்.) இட்டவன் சிறையை நீக்கி எழிலியை விடாது - இடப்பட்ட
வலிய சிறையினின்றும் நீக்கி முகில்களை விடாதுமாறுபட்ட சிந்தையனே
ஆக - மாறுகொண்ட உள்ள முடையனாகபாகசாதனனுக்கு என்றும்
நட்டவன் ஒரு வேளாளன் - இந்திரனுக்கு எப்பொழுதும் நண்பினனாயுள்ள
ஒரு வேளாளன்நான் பிணைஎன்று தாழ்ந்தான் - நான்பிணை என்று
வணங்கினான்அவிழ்ந்து மட்டு ஒழுகு நிம்பமாலிகை மார்பினானும் -
மலர்ந்து தேனொழுகும் வேப்ப மலர் மாலையை யணிந்த மார்பினையுடைய
பாண்டியனும் எ - று.

பாகசாதனனை நட்டவன் என உருபு மயக்கமுமாம். பிணை - புணை;
ஈடு. (57)

இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து
வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன்
எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு
விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம். 

இடுக்கண் வந்து உயிர்க்கும் ஊற்றம் எய்தினும் - துன்ப
முண்டாகி உயிருக்கும் இடையூறு வந்தாலும்வாய்மை காத்து -
மெய்ம்மையைப் பாதுகாத்துவடுக்களைந்து ஒழுகும் - குற்றத்தையகற்றி
ஒழுகும்நாலாம் மரபினான் உரையை - நான்காங் குலத்தினனாகிய அவன்
கூறிய மொழியைஆத்தன் எடுத்து உரை மறைபோல் சூழ்ந்து - இறைவன்
(உயிர்களின் பொருட்டு) எடுத்துக் கூறிய மறை மொழிபோல் மதித்துசிறைக் களத்து இட்ட யாப்பு விடுத்தனன் - சிறைச்சாலையின்கண் இட்டிருந்த தளையினை நீக்கினான்மேகம் எல்லாம் பகடுபோல மீண்டன - முகில்கள் நான்கும் யானைகள் போல மீண்டு சென்றன எ - று.

 இடுக்கண் - வறுமை முதலிய துன்பம்உயிர்க்கும் : உம்மை எச்சமும்
சிறப்புமாம். ஊற்றம் - ஊறு. வாய்மை காத்தலை வழுக்கறு வாய்மை
மாண்பும்’ என மேலே உரைத்ததனுள்ளுங் காண்க. வேத மொழிபோற்
பொய்யாதெனக் கருதிகளவேள்வி நாட்டில் ஏழூர்களையுடைய ஒருவன்
நாம் முன்’ என்று கூறிப் புணை நின்றான் என நம்பி திருவிளையாடல்
கூறும். (58)


திருமண நிகழ்ச்சிகளில் ஆனை அரசாணி உபயோகிப்பதன் நோக்கம்

மேற்கூறிய நமது முன்னோரின் செயலுக்கு மகிழ்ச்சியுற்று இந்திரன் தமது வெள்ளை யானையையும், தெய்வ லோகக் குதிரையையும், சப்த யானைகளையும், ஆயிரம் பெருந்திரியையும் உபயோகிக்க அனுமதி அளித்ததாகவும், அவைகளையே நாம் நமது இல்லத்தின் திருமண நிகழ்ச்சிகளில் தற்போது பதுமைகளாகப் பயன்படுத்தி வருவதைக் காண்கிறோம்.

கோத்திரங்கள் ஏற்பட்ட விதம்

முன்னொரு காலத்தில், சோழநாடு மழையின்மையால் வறட்சியுற்றது.  அப்போது ஆட்சி செய்து வந்த சோழன், பாண்டியன் வாயிலாக கார்காத்த வேளாளரின் வரலாற்றைக் கேள்விப்பட்டு, கார்காத்தார் இருக்குமிடத்தில் அவசியம் மழை பொழியும் என நம்பி பாண்டிய நாட்டில் உள்ள கார்காத்த வேளாளர்களில் 96 குடும்பத்தினரை அழைத்துச் சென்று வடக்கு தெற்கு ஆற்காட்டுப் பகுதியில் 96 ஊர்களில் குடியேற்றினான்.  காரணம் மழை எல்லா இடங்களிலும் பெய்ய வேண்டும் என்பதே.  நாளடைவில், இந்த தொண்ணூற்றி ஆறு குடும்பத்தினரும் தங்கள் சந்ததிக்கு ஓர் கோத்திரமாக அமைத்து ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் செய்து பெருகி வந்தனர்.  அதுவே இன்று தொண்ணூற்று ஆறு கோத்திரமாகத் திகழ்கிறது 
(சான்று : வருண சிந்தாமணியில் 96 கோத்திரங்கள் இணைப்பில் உள்ளன).


 ”பிள்ளை” என்று பெயருக்குப் பின் போடுவதன் காரணம்? 

சோழநாட்டில் வாழ்ந்து வந்த நமது மூதாதையரில் ஸ்ரீ வடமலையப்பன் என்பவர் திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள சோழபுரம் என்ற ஊரில் தோன்றி, தனது சிறிய தகப்பனாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.  தனது சிறிய தகப்பனாரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் கோபித்து, வீட்டை விட்டுச் சென்றார்.   இவரின் கல்வி, கேள்விகளை அறிந்து ஸ்ரீரெங்கம் என்ற ஊரில் இருந்த கர்த்தாக்களின் ஆச்சாரியரான, தாத்தாச்சாரி என்பவரால் “பிள்ளை” போல் வளர்க்கப் பெற்றார்.

நாயக்க மன்னரான, சொக்கநாத நாயக்கரிடம் நான் இவரை என் “பிள்ளை” போல் வளர்த்து தங்களிடம் அனுப்புகிறேன் என்று கூறியமையால், இவர் வடமலையப்ப பிள்ளை என்றும், தாத்தாச்சாரி என்ற ஐயனிடம் இருந்து வந்த பிள்ளை என்பதைக் குறிக்க ”பிள்ளையன்” என்றும் அழைக்கப்பட்டார்.  அதுவே பிற்காலத்தில் பெயருக்குப் பின்னால் “பிள்ளை” “பிள்ளையன்” என்ற சமூகப்பெயர்களை தாங்கி வந்தது (புலவராற்றுப்படையில் சான்றுகள் உள).  வடமலையப்ப பிள்ளை நாயக்க மன்னரால் திருநெல்வேலிச் சீமை தளபதியாக அமர்த்தப்பெற்று அப்பகுதியை ஆண்டு வந்தார் எனவும் அறிகிறோம்.

ஒரு செப்பேட்டு ஆய்வு - சமூக ரெங்கபுரம் செப்பேடு
சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் கி.பி. 1166ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்பட்டாலும்எழுத்தமைதிசொல் வழக்குகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அச்செப்பேடு 17ஆம் நூற்றாண்டில்குறிப்பாகத் திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடாகவே தெரிகிறது. திருமலை நாயக்கரின் பிரதானியான வடமலையப்ப பிள்ளை காரைக்காட்டு வேளாளர் வம்சத்தைச் சேர்ந்தவராவார். அவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பேரூரணியில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தடயங்களையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் வடமலையப்ப பிள்ளையின் ஆதரவுடன் செழுகை வேளாளர்கள் இப்பகுதியின் மீது தாங்கள் கொண்டிருந்த நீண்ட நாளைய (சற்றேறக்குறைய நூற்றாண்டுகள்) உரிமையைக் காத்துக் கொண்டனர் என நாம் முடிவு செய்யலாம்.

மேலும் “தாயிட்ட பெயரே தரையிட்டழைக்கு” என்ற பழமொழிக்கு ஒப்ப அருட் சக்தியான கங்கையினிடத்து உண்டான வேளாளர்களை “பிள்ளைகளே” என்று உமாதேவி அழைத்ததினால் அப்பிள்ளையெனும் பெயரே பட்டப் பெயராக வழங்குவதாயிற்று எனவும் அறியக் கிடக்கிறோம்.  (வருண சிந்தாமணி, வேளாளர் உற்பவச் சுருக்கம்).

சேக்கிழார் புராணம் - http://www.tamilvu.org/slet/l41d0/l41d0num.jsp?sno=144

வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த
விழுக்குடிப் பிறப்பு மூவ ரேவிய வினைகேட் டாற்றும்
ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா
இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்.

     (இ - ள்.) வழுக்கு அறு வாய்மை மாண்பும் - தவறில்லாத
வாய்மையின் மாட்சியும்கங்கைதன் மரபின் வந்த - கங்கையின்
குலத்திற்றோன்றியவிழுக்குடிப் பிறப்பும் - சீரிய குடிப்பிறப்பும்,
மூவர் ஏவிய வினைகேட்டு ஆற்றும் ஒழுக்கமும் - மூவர்கள் கூறிய
வினைகளைக் கேட்டு முடிக்கின்ற ஒழுக்கமும்வேந்தர்க்கு -
அரசருக்குஅமைச்சாய் - மந்திரியாய்உறுதி சூழ்வினையும் -
ஆவன ஆராயும் வினையும்குன்றா - குறையாதஇழுக்கு அறும் -
கோழைபடாதமேழிச் செல்வர் - மேழியால் வருஞ்
செல்வத்தையுடைய வேளாளரின்மறுகுவளம் - வீதியின்
வளப்பங்களைஇயம்பல் உற்றாம் - சொல்லத் தொடங்கினோம்
எ - று.
     வேளாளர் வாய்மையிற் சிறந்தாராதலை,
"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
     வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்
கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக்
     குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை
அறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்ப
     ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற்
     பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ"
எனச் சேக்கிழார் புராணத்துக் கூறப்பட்ட வரலாற்றானறிக. அவர்
கங்கை குலத்தினராதலை,

பல வரலாறுகளிலிருந்து, நம் முன்னோர்கள் மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சை, வடஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மேம்பட வாழ்ந்து வந்தனர் என்று அறிகிறோம்.

அச்சுத களப்பாளர், வெண்ணை நகர்க்கச்சியப்பர், சடையப்பர், ஏகம்பவாணர், பொய்கண்டகன்ற மெய்கண்ட தேவர், மாதவச் சிவஞான யோகிகள், பொய்யாமொழிக்கு ஓர் உரையாசிரியரான மணக்குடவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகத்திலமைத்துப் பாடும் பரிசு பெற்ற கடையேழு வள்ளலில் ஒருவரான பாரி ஆகியோரெல்லாம் நம்மவர்களே.  ஆகவே, இவர்கள் முன்னிருந்த உன்னத நிலைமையையும், அவர்களின் தோன்றல்களான நாம் இப்பொழுது அடைந்திருக்கும் பின்னடைவையும் சீர்தூக்கி

காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மரபை நாவலரைக் காவலரை நல்லோரைப் பூவலய உள்ளத்து அரும்பு உவையூரைச் சிறப்பித்தான் பிள்ளைப் பெருமாள் பிறந்து

என்பதிற்கியைய இனிமேலாவது, நம் முன்னோரைப் பின்பற்றி நாமும், அத்தகையோர்களின் வம்சத்தாரே என்பதை வாக்கால் அல்லாமல், செயலிலும் காட்டிச் சீரும் சிறப்பும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வாராக.

மேற்கூறிய நமது சமூக வரலாறும், நமது சமூகப் பாரம்பரியம் முதலியவைகளை நன்கு அறிந்து, அவைகளைக் கட்டிக்காத்து, நமது சமூகம் பெருகித் தழைத்திட, எல்லாத்துறைகளிலும் முன்னேற்றம் கண்டிட நமது சமூக இளைஞர்களும், பெரியோர்களும் இணைந்து பணி செய்ய வேண்டுமாயும், நம் முயற்சி பலன் பெற எல்லாம் வல்ல இறைவனின் இன்னருளை வேண்டிக் கொண்டு நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment